Published : 21 Nov 2022 06:15 PM
Last Updated : 21 Nov 2022 06:15 PM

கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பு: நவ.25-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி | கோப்புப்படம்

சென்னை: அரையாண்டு மற்றும் இறுதித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டியுள்ளதால், கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பது குறித்து வரும் நவம்பர் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆர் சர்வதேச பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்த பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில், பள்ளி முழுமையான அளவில் தயாராகிவிட்டது. எனவே, எல்கேஜி முதல் அனைத்து வகுப்புகளையும் தொடங்க தயாராக இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசின் கருத்துக்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அரையாண்டு மற்றும் இறுதித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டியுள்ளதால், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்த கருத்துக்களுடன் நவம்பர் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினத்துக்கே விசாரணையை தள்ளி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x