

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 19-ம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 20-ம் தேதி (நேற்று) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், சென்னையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 670 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு,
வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 21, 22-ம் தேதிகளில் வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23, 24-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளிலும், 22-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 22 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். 20-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: 21, 22-ம் தேதிகளில் இலங்கை, தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.