Published : 20 Nov 2022 09:25 AM
Last Updated : 20 Nov 2022 09:25 AM

பல மின்இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

சென்னை: ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகளை வைத்திருக்கும் நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க முடியுமா என்பதற்கு மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகம் மின்வாரியம் நுகர்வோர்களின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தெரிவித்துள்ளது. அத்துடன், இதற்கான பணியையும் தொடங்கியுள்ளது. இதன்படி, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்நுகர்வோரின் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.

சில மின்நுகர்வோர் ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பை பெற்றுள்ளனர். மேலும், சிலர் ஒரே பெயரில் நான்கைந்து வாடகை வீடுகளுக்கு மின்இணைப்பை பெற்றுள்ளனர். இந்நிலையில், மின்நுகர்வோர் தங்கள் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகளுக்கு ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது குறித்து கேட்டபோது, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: நுகர்வோருக்கு மின்வாரியம் வழங்கிவரும் மானியத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்டமின்இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின்இணைப்புகளுக்கும் தனது ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். இதில் பிரச்சினை ஏதும் கிடையாது.

அதேபோல, வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் பட்சத்தில், அந்த வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்கள்ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைக்கலாம். இதற்கான வசதிகளும் மின்வாரிய இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x