Published : 20 Nov 2022 04:12 AM
Last Updated : 20 Nov 2022 04:12 AM

புதிய டிசைன்களில் இலவச வேட்டி- சேலை - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலைகளை தலைமைச் செயலகத்தில் நேற்று பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி உள்ளிட்டோர்.

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு, குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய டிசைன்களில் வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்குத் தேவையான சேலைகள் மற்றும் வேட்டிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

நடப்பாண்டில் இந்த திட்டத்துக்காக ரூ.487.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் இதற்கான உற்பத்தி நடைபெறும் நிலையில், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு மற்றும் துறைச் செயலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை உற்பத்திப் பணிகளை விரைந்து முடித்து, ஜனவரி முதல் வாரத்துக்குள் நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவற்றை விநியோகிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

கூட்டத்துக்குப் பின்னர், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலைகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்தக் கூட்டத்தில், பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் மட்டுமின்றி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆண்டு புதிய வடிவமைப்புகளில் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ 10 வருடங்களுக்குப் பிறகு வேட்டி, சேலை டிசைன்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 15 வடிவமைப்புகள் கொண்ட சேலைகளும், 5 விதமான பார்டர்கள் கொண்ட வேட்டிகளும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன. 2023 ஜனவரி 10-ம் தேதிக்குள் வேட்டி, சேலை விநியோகத்தை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x