

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டுள்ள சுவாமி ராமானுஜர் சிலையை வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். ஸ்ரீ யதுகிரி யதிராஜ முத் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா சபஹங்கனா அரங்கில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மஹோத்சவம் நிகழ்ச்சி வரும் 24, 25-ம் தேதிகளில் நடைபெறுகிறது. சிறப்பு ஹோமம் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளுடன் 24-ம் தேதி இவ்விழா தொடங்குகிறது.
அன்று காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் யதுகிரி யதிராஜ ஜீயர் சுவாமிகளின் தெய்வீக உரை நடைபெறுகிறது. பின்னர் ராம கதா, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சிறப்பு விருந்தினர்களாக விஜய் வசந்த் எம்.பி., கர்நாடக அமைச்சர் அஸ்வத் நாராயண், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., விவேகானந்தா கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டுள்ள சுவாமி ராமானுஜரின் சிலையை வரும் 25-ம் தேதி பகல் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஆன்மிகவாதிகள் விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள ராமாயண கண்காட்சிக் கூடம், வெங்கடாஜலபதி கோயிலுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் ராமானுஜரையும் வழிபட்டு செல்லும் வகையில் அவரது சிலை அங்கு திறக்கப்பட உள்ளது.விவேகானந்தா கேந்திராவில் ராமாயண கண்காட்சிக் கூடம், வெங்கடாஜலபதி கோயில் ஆகியவையும் உள்ளன.