Published : 18 Nov 2022 07:44 AM
Last Updated : 18 Nov 2022 07:44 AM

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால், நாகையை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

காரைக்கால்/ராமநாதபுரம்: கடலில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி காரைக்கால் மற்றும் நாகை மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், தினேஷ்குமார், சதீஷ், கமல், மணிகண்டன், தர்மன், லட்சுமணன், கிஷோர், குமார் மற்றும் நாகை, ஜெகதாப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் என 14 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நவ.15-ம் தேதி செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, விசைப்படகுடன் 14 மீனவர்களையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகள் மத்திய அரசை அணுகி, இலங்கை அரசுடன் பேசி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கடிதம் இதைத் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்வதுடன், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

15 பேர் விடுவிப்பு: இதற்கிடையே தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து நவம்பர் 5-ம் தேதி 2 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற அந்தோணி ராயப்பன், இம்ரோன் ராபின்சன், லியோ, ஜாய்சன், எஸ்ரா, முருகன், நம்புமிலன், காளிமுத்து, வினோத், நம்பு
குமார், அந்தோணி, அருணாசலம், பாண்டி, செந்தூர்பாண்டி, மருது ஆகிய 15 பேரை தலைமன்னார் அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 15 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. 15 மீனவர்களும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மீனவர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள
இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கிடையே, தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரை சென்னை புழல் சிறையில் அடைக்க ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 14-ம் தேதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 4 படகுகளை மடக்கிய இந்திய கடலோரக் காவல்படையினர், அவற்றில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 3.7 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். படகுகளில் இருந்த தூத்துக்குடி மீனவர்கள் 10 பேர், இலங்கை மீனவர்கள் 6 பேரை பிடித்து சுங்கத் துறையிடம் ஒப்படைத்தனர்.

புழலில் இலங்கை மீனவர்கள்: இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்த மெரைன் போலீஸார், 6 பேரையும் நேற்று ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை டிச.1 வரை நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்க தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.கவிதா உத்தரவிட்டார். இதையடுத்து இலங்கை மீனவர்கள் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x