Published : 01 Nov 2016 03:35 PM
Last Updated : 01 Nov 2016 03:35 PM
காவிரி ஒப்பந்தத்தை 1974-ல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி புதுப்பிக்கத் தவறியது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸை ஆதரித்து பனையூர் பகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல் லப்பா ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
திருப்பரங்குன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் வெறும் 4 லட்சத்து 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்தான் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக 232 தொகுதியிலும் தனியாக போட்டியிட்டு 1 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரத்து அறுபது வாக்குகளை பெற்றது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்த திமுக அத்தேர்தலில் 1 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகளை பெற்றிருந்தது. இதை மறந்து ஏதோ தனியாக வாக்குகள் பெற்றதைப்போல் ஸ்டாலின் பேசி வருகிறார்.
காவிரி நதிநீர் ஒப்பந்தம் 1924-ல் மைசூர் ராஜதானி மற்றும் சென்னை மாகாணம் இடையே 50-ம் ஆண்டு காலத்துக்கு ஏற்படுத்தப்பட்டது. அதை 1974-ல் புதுப்பிக்க வேண்டும். அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி, அதை புதுப்பிக்க தவறிவிட்டார். தன் மீதான ஊழல் புகாரிலிருந்து தப்பிக்கவே, அவர் இவ்வாறு செய்தார்.
ஆனால், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் காவிரி நதிநீரை பெற பல் வேறு சட்டப்போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட ஜெயலலிதா ஏற்பாடு செய்தார். காவிரி நீரை பெறுவதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறார் என்றார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.மாணிக்கம், பெரியபுள்ளான், முன்னாள் எம்எல்ஏக்கள் ம.முத்து ராமலிங்கம், தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT