Published : 19 Jul 2014 09:06 AM
Last Updated : 19 Jul 2014 09:06 AM

டிசம்பருக்குள் மின்னணு குடும்ப அட்டைகள்: பேரவையில் அறிவிப்பு

மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வரும் டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் காமராஜ் பேசியதாவது:

கடந்த ஜூன் 30-ம் தேதி வரை தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள மொத்த குடும்ப அட்டைகள் 1 கோடியே 98 லட்சத்து 24 ஆயிரத்து 905. கடந்த 3 ஆண்டுகளில் தகுதியான குடும்பங்களுக்கு 9 லட்சத்து 79 ஆயிரத்து 914 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல 2 லட்சத்து 85 ஆயிரத்து 717 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படவுள்ளன. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. மக்களின் உடற்கூறு முறையில் 10 விரல் ரேகைகள் மற்றும் கண் பார்வையை பதிவு செய்து பிரத்யேக அடையாள எண் வழங்கப்படுகிறது. இப்பணி முடிந்ததும் அந்த தகவல் தொகுப்பின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகுதான் மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க முடியும். இப்பணியை மாநில அரசு மட்டுமே செய்ய வேண்டுமானால் ரூ.73 கோடி செலவாகும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி 74 சதவீதம் முடிந்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x