Published : 17 Nov 2022 07:20 PM
Last Updated : 17 Nov 2022 07:20 PM

அரசு துறைகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான காலி பின்னடைவுப் பணிகளை நிரப்பக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான காலி பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமல், காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி, நிரப்ப தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய - மாநில அரசு பட்டியலின மற்றும் பழங்குடியின பணியாளர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கருப்பையா தாக்கல் செய்த பொது நல மனுவில், "தமிழகத்தில் பல்வேறு துறைகளில், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 10 ஆயிரத்து 402 அரசுப் பணியிடங்கள், பின்னடைவு காலிப் பணியிடங்களாக உள்ளன. இந்த பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப பல்வேறு விதிகளை வகுத்து கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

மாநிலம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 11 லட்சத்து 96 ஆயிரத்து 982 பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்கள் அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பின்னடைவு காலி பணியிடங்களை, சிறப்பு தேர்வு நடத்தி நிரப்ப நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் தேர்வு முகமைகள், ஏராளமான தேர்வுகளை நடத்தி காலியிடங்களை நிரப்பி வருகிறது.

எனவே, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை சிறப்பு தேர்வு நடத்தி நிரப்பாமல், காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும். மேலும் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x