Last Updated : 17 Nov, 2022 06:29 PM

 

Published : 17 Nov 2022 06:29 PM
Last Updated : 17 Nov 2022 06:29 PM

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்  நடமாடும் மனநல ஆலோசனை மையம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோப்புப் படம்

மதுரை: ‘தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் மனநல ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ஏ.வெரோணிகா மேரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: "நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ (பாலியல்) வழக்குகள் அதிகளவில் பதிவாகி வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவிகளை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளனது.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பள்ளி மாணவிகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்லும்போது பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதை தடுக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் நோக்கத்தில் நடமாடும் மனநல ஆலோசனை மையம் அமைத்து தமிழக அரசு 17.5.2012-ல் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணைப்படி பள்ளிகளில் நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் பல்வேறு தகவல்கள் மற்றும் புள்ளி விபரங்கள் கேட்டு மனு அனுப்பினேன். ஆனால் அரசிடமிருந்து எந்த தகவல்களும், புள்ளி விபரங்களும் இதுவரை தரப்படவில்லை. அரசாணை பிறப்பிக்கப்பட்டபோது பல பள்ளிகளில் பெயரளவில் நடமாடும் மனநல ஆலோசனை மையங்களை தொடங்கியுள்ளனர். அதன் பிறகு திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். தற்போது பள்ளிகளில் நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் இல்லாத நிலையே உள்ளது.

எனவே, தமிழகத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்க நடமாடும் மனநல ஆலோசனை மையம் செயல்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பள்ளிகளில் நடமாடும் மனநல ஆலோசனை மையம் அமைப்பது தொடர்பாக 2012-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆலோசனை மையம் செயல்படாதது ஏன்? பள்ளிகளில் நடமாடும் மனநல ஆலோசனை மையம் முறையாக செயல்படுத்த வேண்டும். இந்த ஆலோசனை மையம் மாணவ, மாணவிகளுக்கு முக்கியமானது. எனவே, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் மனநல ஆலோசனை மையம் அமைத்து, மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x