Published : 17 Nov 2022 12:25 PM
Last Updated : 17 Nov 2022 12:25 PM

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து; பாஜக நிர்வாகிக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில்பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக நிர்வாகிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "அவதூறு பேச்சு குறித்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகும் மனுதாரர் குறித்து நிர்மல்குமார் அவதூறாக பேசிவருகிறார்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு நிர்மல் குமார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x