Published : 17 Nov 2022 12:11 PM
Last Updated : 17 Nov 2022 12:11 PM

ஒரு மாதத்தில் 4வது முறை; 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கைக்கு அன்புமணி கண்டனம் 

பாமக தலைவர் அன்புமணி | கோப்புப் படம்.

சென்னை: ஒரு மாதத்தில் நான்காவது முறையாக 14 தமிழக மீனவர்கள் கைது செய்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

கடந்த ஒரு மாதத்தில் நான்காவது கைது நடவடிக்கை இதுவாகும். அக்டோபர் 20-ஆம் தேதி 3 பேர், 27-ஆம் தேதி 7 பேர், கடந்த 6-ஆம் தேதி 15 பேர், இப்போது 14 பேர் என மொத்தம் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படியாக சிங்களக் கடற்படையின் அத்துமீறல் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலை பாமக தொடர்ந்து கண்டித்து வருகிறது; மத்திய அரசுக்கு முதலமைச்சர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்; இராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா.

மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும், ஏற்கனவே கைதானவர்களையும் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x