Published : 17 Nov 2022 04:59 AM
Last Updated : 17 Nov 2022 04:59 AM

இளம் கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரம்: பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் தலைமறைவு

சென்னை: தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டு இளம் வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா (17) வலது கால் மூட்டு சவ்வு விலகியதால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு சரிசெய்யும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில்மிக இறுக்கமாக சுருக்கு கட்டு போடப்பட்டதால், ரத்த ஓட்டம் தடைபட்டு, ரத்தநாளங்கள் பழுதான நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மாணவியின் வலது கால் அகற்றப்பட்டது. பின்னர் சிறுநீரகம், ஈரல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் கடந்த 15-ம் தேதி காலை மாணவி பிரியா உயிரிழந்தார்.

‘‘பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால்தான் எங்கள் மகள் இறந்துவிட்டார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மாணவியின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் செயல்பட்ட பெரியார் நகர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் கே.சோமசுந்தர், எலும்பியல் மருத்துவர் ஏ.பால் ராம் சங்கர் ஆகிய 2 மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாணவியின் தந்தை ரவிக்குமார் கொடுத்த புகாரின்பேரில், பெரவள்ளூர் போலீஸார், சந்தேக மரணம் (ஐபிசி 174) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வழங்கசுகாதாரத் துறை அதிகாரிகள் சென்றபோது, 2 அரசு மருத்துவர்களும் தலைமறைவானது தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘மருத்துவக் குழு அறிக்கை அடிப்படையில்தான் 2 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் மாணவி உயிரிழந்துள்ளார் என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறோம். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

மனித உரிமை ஆணையம் உத்தரவு: இதற்கிடையில், இதுதொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார். இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலர் 6 வாரத்துக்குள் விரிவான அறிக்கைதாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மனிதஉரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x