

சென்னை: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு முதல் ரயில் நேற்று இரவு புறப்பட்டது. இந்த ரயிலில் 216 பிரதிநிதிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.
காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான நாகரிக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி, வாரணாசியில் இன்று (நவ.17) தொடங்கி டிச. 16 வரை நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக, காசி - தமிழகம் இடையேயான தொடர்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக கொண்டு, சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில், அறிஞர்கள் இடையே கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் இடம்பெற உள்ளன. இரு பிராந்திய மக்களிடையே உறவை ஆழப்படுத்துவது இதன் பரந்த நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் பிரதிநிதிகள் பங்கேற்க வசதியாக, தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர். சென்னை எழம்பூருக்கு ரயில் வரும்போது இதில் பயணிக்கும் பிரதிநிதிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாட உள்ளார். தொடர்ந்து, ரயிலை கொடியசைத்து அனுப்பி வைப்பார். இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் பங்கேற்கிறார்.