Published : 17 Nov 2022 06:38 AM
Last Updated : 17 Nov 2022 06:38 AM

நடுக்கடலில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரிடம் தீவிர விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரிடமும் மத்திய, மாநில உளவு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய கடலோர காவல் படையினர் 'ஐசிஜிஎஸ் வஜ்ரா' என்ற ரோந்து கப்பலில் கடந்த 14-ம்தேதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் 4 படகுகளை மடக்கிப் பிடித்து, அவற்றில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவற்றில் 2 படகுகள் இலங்கையை சேர்ந்தவை, மற்ற இரு படகுகள் தூத்துக்குடியைச் சேர்ந்தவை என தெரியவந்தது. இலங்கை படகுகளில் இலங்கை கல்பட்டி பகுதியைச் சேர்ந்த ரனில் சமரா, உதராகசன், சகான் ஸ்டீவன், சஞ்சீவ், சுதேஷ் சஞ்சீவ, சங்கலப்பா ஜீவன்தா ஆகிய 6 பேர் இருந்தனர்.

3.7 டன் பீடி இலை: தூத்துக்குடி படகுகளில் தூத்துக்குடியைச் சேர்ந்த காட்வின், லெமிட்டன், ராபின், நிஷாந்த், சேவியர், கிங்ஸ்டன், வெர்னோ, கோல்வின், சசிகுமார் மற்றும் டார்வின் ஆகிய 10 பேர் இருந்தனர். தூத்துக்குடி படகுகளில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3.7 டன் எடையுள்ள பீடி இலை பண்டல்கள் இருந்தன. இவற்றை வாங்குவதற்காக இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 படகுகளையும், 3.7 டன் பீடி இலை பண்டல்களையும் பறிமுதல் செய்து, 16 பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இவர்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர். இலங்கை மீனவர்கள் 6 பேரிடமும் மத்திய, மாநில உளவுப் பிரிவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இலங்கையைச் சேர்ந்த 6 பேரையும் ராமநாதபுரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேநேரத்தில் தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்கள் மீதும் சுங்கத்துறை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சுங்கத்துறை அதிகாரிகளே தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x