

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே வலையில் சிக்கிய புள்ளி திமிங்கலத்தை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில், டால்பின், கடல் பசு, திமிங்கலம், சுறா உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. இவை கடலில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள், விபத்துகள் மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்குவதும், உயிரிழந்து கரை ஒதுங்குவதும் உண்டு.
இந்நிலையில் ராமேசுவரம் அருகே அழகன்குளம் கடல் பகுதியில் கரை வலை மீன்பிடியில் அப்பகுதி மீனவர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய மீன் ஒன்று வலையில் சிக்கியிருப்பதை கண்டு, வலைக்கு அருகே சென்று பார்த்தபோது அது அரிய வகை புள்ளி திமிங்கலம் என்பது தெரிய வந்தது. சுமார் 2 ஆயிரம் கிலோ எடையிலான அந்த மீனை சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு வலையில் இருந்து விடுவித்தனர்.