Published : 19 Jul 2014 11:59 AM
Last Updated : 19 Jul 2014 11:59 AM

சென்னையில் 60 ஆண்டுகளாக ஓடும் ஒரே ஒரு தனியார் பேருந்து

மாநகரப் பேருந்துகள் மட்டுமே ஓடிவரும் சென்னையில் பிராட்வே பூந்தமல்லி வழித்தடத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் பேருந்து ஒன்றும் ஓடிக் கொண் டிருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் கண்ணில் படும் மாநகரப் பேருந்துகளுக்கு நடுவே பிராட்வே - பூந்தமல்லி (எண்.54) வழித்தடத்தில் பல ஆண்டுகளாக ஓடிவருகிறது அந்த தனியார் பேருந்து. அரசு நிர்ணயிக்கும் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும், மாநகரப் பேருந்துகளுக்கு நிறம் மாற்றும்போதெல்லாம், இந்த பஸ்ஸுக்கும் நிறம் மாற்றுகின்றனர். இந்த பேருந்தின் இருக்கை வசதி உள்பட அனைத்தும் அச்சு அசலாக மாநகரப் பேருந்து போலவே இருக்கின்றன. உள்ளே சென்று டிக்கெட் வாங்கிப் பார்த்தால்தான் தெரியும் தனியார் பேருந்து என்று. ‘கலைவாணி பஸ் சர்வீஸ்’ என்று பயணச் சீட்டில் அச்சிடப் பட்டிருக்கிறது. பயணிகள் இனிமை யாக பாடல்களை கேட்டுக்கொண்டே பயணம் செய்வதற்காக சி.டி. பிளேயரும் உண்டு. பேருந்தின் உள் புறம் மண், தூசி, குப்பை இல்லாமல் தூய்மையாக பளிச்சென்று இருக்கிறது.

மாநகரப் பேருந்துகளுக்கு நடுவே ஒரே ஒரு தனியார் பேருந்து எப்படி? இதுபற்றி கேட்டபோது போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:

1972-ம் ஆண்டில் தனியார் பேருந்துகள் அரசுடைமையாக் கப்பட்டபோது, பலர் தங்களது பேருந்துகளை அரசிடம் ஒப்படைத் தனர். சிலர் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்று அரசிடம் கொடுக்காமல் ஓட்டி வந்தனர். குறிப்பிட்ட வழித்தடங்களில் அரசு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப் பட்டதால், நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் எஞ்சிய பேருந்து முத லாளிகளும் தங்களது பேருந்துகளை அரசிடமே ஒப்படைத்தனர்.

சென்னையில் எண்.54 வழித் தடத்தில் மட்டும் ஒரே ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. தனியார் பேருந்துகள் அரசுடைமையாக்கப் படுவதற்கு முன்பிருந்தே அந்த பேருந்து இயக்கப்படுகிறது. அதன்பிறகு, எந்த தனியார் பஸ்ஸுக்கும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக எல்லைக்குள் அனுமதி அளிக்கப்படவில்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

சிறப்பு உரிமம்

‘‘நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே எங்கள் நிறுவனப் பேருந்து இதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு உரிமத்தை எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது’’ என்கிறார் கலைவாணி பஸ் சர்வீஸ் நடத்துநர்.

தமிழ்நாடு அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்க (சிஐடியூ) தலைவர் எம்.சந்திரன் கூறும்போது, ‘‘சென்னையில் எண்.54 வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே இயக்கப்படுகிறது. வாகன எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தாலும்கூட இப்போதும் மிகச்சரியான நேரத்துக்கு பேருந்தை இயக்குவது பாராட்டுக்குரியது. அதிகாலை 4 மணிக்கு செம்பரம்பாக்கத்தில் புறப்பட்டு போரூர், கிண்டி, சைதை, டிஎம்எஸ், அண்ணா சாலை வழியாக பிராட்வே வரை செல்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x