Published : 16 Nov 2022 06:34 PM
Last Updated : 16 Nov 2022 06:34 PM

மருத்துவ மேற்படிப்பு | வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சான்றிதழ்களை சரிபார்க்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என மருத்துவப் படிப்பு தேர்வுக் குழுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த கிரீஷ்மா கோபால், ரோஹன் மகேஷ் உள்பட ஏழு பேரின் விண்ணப்பங்களை நிராகரித்து, தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியலை தேர்வுக்குழு வெளியிட்டது. இந்தப் பட்டியலை ரத்து செய்து, தங்களை கலந்தாய்வில் அனுமதித்து மாணவர் சேர்க்கை வழங்க கோரி ஏழு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வுக்குழு தரப்பில், "வெளிநாடு வாழ் இந்தியர்கள் என அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அளித்த வெளிநாடு வாழ் இந்தியர் என்ற சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சேர்க்கை கோரியவர்கள் தேவையான மதிப்பெண்களைப் பெறவில்லை. எனவேதான் இவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களும் சரி பார்க்கப்பட்டனவா?” என கேள்வி எழுப்பினார். அப்போது, "மனுதாரர்கள் ஏழு பேரின் சான்றுகள் மட்டும் சரிபார்க்கப்பட்டது" என்று தேர்வுக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, "அடுத்த கல்வியாண்டு முதல் வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் வெளிநாடு வாழ் இந்தியர் சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து சரிபார்க்க வேண்டும். போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்கலாம்" என்று உத்தரவிட்டார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், ஏழு பேரில் இருவருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை கிடைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள ஐந்து பேரில், போலி சான்று அளித்த இருவரின் விண்ணப்பங்களையும், குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் ஒருவரின் விண்ணப்பத்தையும் நிராகரித்தது சரி என உத்தரவிட்ட நீதிபதி, மற்ற இருவரையும் சேர்த்து கலந்தாய்வு நடத்தி தகுதியுள்ளவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x