Published : 16 Nov 2022 02:09 PM
Last Updated : 16 Nov 2022 02:09 PM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.19 வரை மிதமான மழை; நவ.20-ல் 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சமீபத்தில் பெய்த மழை.

சென்னை: தமிழகத்தில் 19-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழையும், இம்மாதம் 20-ம் தேதியன்று 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: கேரள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

20-ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்கள், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை, மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பணி மூட்டம் காணப்படும். மேலும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுபெறக் கூடும்.

எனவே, இன்று முதல் 18-ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொடிடிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

19 மற்றும் 20-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வஙகக் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x