Published : 15 Nov 2022 02:11 PM
Last Updated : 15 Nov 2022 02:11 PM

27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சம்பா பயிர்

சென்னை: தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நேற்று (நவ.14) நான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். செப்டம்பர் 15, 2022 முதல் தொடங்கிய சிறப்பு (சம்பா, தாளடி, பிசானம்) பருவத்தில், விவசாயிகள் பயிர்க் காப்பீட்டிற்கான பதிவினை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளினால் தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக, பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பல விவசாயிகள் பெற முடியாததால், பயிர்க் காப்பீட்டிற்கான பதிவினை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து இடைவிடாத மழை பெய்து வருவதாலும், வடகிழக்குப் பருவமழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, சில இடங்களில் ஏற்பட்ட மின்தடை காரணமாக பயிர்க் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட நவ.15-ம் தேதி என்ற காலவரம்பினை, நவ.30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே தஞ்சாவூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் , கடலூர், புதுக்கோட்டை, மதுரை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம், தேனி, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் பயிரிடப்படும் இரண்டாம் போக நெல் (சம்பா,தாளடி,பிசானம்) சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவினை நவம்பர் 15ம் தேதியிலிருந்து, நவம்பர் 30ம் தேதி வரை வரை நீட்டிக்க வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x