Published : 15 Nov 2022 01:14 PM
Last Updated : 15 Nov 2022 01:14 PM

மாணவி பிரியா மரணம்: உறவினர்கள் போராட்டம்; காவல்துறை பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உடல் ஒப்படைப்பு

உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் உறவினர்கள்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் உயிரிழந்த மாணவி பிரியாவின் உடலை வாங்க மறுத்து, மாணவியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காவல்துறை பேச்சுவார்த்தையின் முடிவில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா (17). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார். கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார்.

அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த பிரியா இன்று காலை உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப்பின் மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், மாணவியின் கால்பந்தாட்ட விளையாட்டு நண்பர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் மாணவி பிரியாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காவல்துறை பேச்சுவார்த்தையின் முடிவில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, கால்பந்து வீராங்கனை - மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன் விவரம்: கால்பந்து வீராங்கனை பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என்ன? - மருத்துவர்கள் விளக்கம்

முன்னதாக, மருத்துவர்களின் கவனக்குறைவால் மரணம் அடைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 2 மருத்துவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கவல்துறை நடவடிக்கைக்கு புகார் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதன் விவரம்: 'மருத்துவர்களின் கவனக்குறைவு; மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பிரியாவின் தந்தை உருக்கம்: “சின்ன அறுவை சிகிச்சை என்பதால்தான், பெரியார் நகர் மருத்துவமனைக்கு முதலில் சென்றோம். அப்போது என் மகள் நடந்துதான் வந்தாள், இப்போது எனது பிள்ளையே போய்விட்டது சார்” என்று பிரியாவின் தந்தை உருக்கமாக கூறினார். வாசிக்க > 'நடந்துவந்த மகள்... இப்போது உயிரோடு இல்லை' - வீராங்கனை பிரியாவின் தந்தை உருக்கம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x