Published : 15 Nov 2022 06:58 AM
Last Updated : 15 Nov 2022 06:58 AM

விளையாட்டு வீராங்கனை கால் பறிபோக காரணமான 2 அரசு மருத்துவர்கள் இடமாற்றம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: விளையாட்டு வீராங்கனையின் கால் பறிபோக காரணமான இரண்டு அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா (17). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள ளார்.

இந்நிலையில், மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது கால் அகற்றப்பட்டது.

இதற்கிடையே, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே பிரியாவின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த, அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது. அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், பாதிப்புகளுக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி, அரசிடம் தங்களது அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மாணவி பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், மூட்டு உள்நோக்கி கருவியின் மூலம் ஜவ்வு சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின் போது, ரத்த சேதத்தைத் தடுப்பதற்காக சுருக்கு கட்டு போடப்பட்டுள்ளது. அதனால் கால் ரத்த ஓட்டம் தடைபட்டு, காலை எடுக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.

சிறிய கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்புக்காக, மிகவும் வருந்துகிறோம். இதற்காக அந்த மருத்துவமனையின் எலும்பியல் துறையைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர் கோரிக்கை

அந்த மாணவியின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று, அவருக்கு நவீன பேட்டரி கால்கள் பொருத்தும் பணி விரைவில் நடைபெறும். மேலும், முதல்வரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்படும். மாணவி பிரியா, பி.எஸ்சி. உடற்கல்வியியல் முடித்த பிறகு, அரசு வேலை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் உள்ள 11,333 அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் என 1.75 லட்சம் பேர்பணியாற்றி வருகின்றனர். எங்கேயாவது தவறு நடந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ‘104’ என்ற மருத்துவ சேவை எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x