Published : 15 Nov 2022 06:27 AM
Last Updated : 15 Nov 2022 06:27 AM

கூட்டுறவு சங்கங்கள் மூலம் ‘டோர் டெலிவரி வசதி’ - துறை செயலர் அறிவுறுத்தல்

சென்னை: இந்திய தர நிர்ணயக் கழகத்தின் (பிஐஎஸ்) ஐஎஸ்ஓ தரச்சான்று பெறுவது தொடர்பாக, மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண் இயக்குநர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பயிற்சியை தொடங்கிவைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த காமதேனு சிறப்பங்காடி கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த ஆண்டு ரூ.10,292 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2022-23) ரூ.12 ஆயிரம் கோடி பயிர்க் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 8.97 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,553 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட அளவு பயிர்க்கடன் வழங்கப்படும். தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 33 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பயிற்சி முகாமில் அவர் பேசும்போது, “மக்களை ஈர்க்கும் வகையில், வீட்டுக்கே சென்று பொருட்களை விநியோகிக்கும் ‘டோர் டெலிவரி’ முறை, அனைத்து பொருட்களையும் தரமாக வழங்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், கூட்டுறவு கடைகள் குறித்து விளம்பரப்படுத்த வேண்டும்” என்றார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அ.சங்கர், பிஐஎஸ் நிறுவனப் பொறியாளர் விஜயவீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x