

மதுரை: பிரதமர் மோடி எங்களிடம் மட்டுமே பேசினார், நலம் விசாரித்தார் என்று மற்றொரு கட்சியின் தலைவரை சந்தித்ததை ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பெருமை பாராட்டிப் பேசி வருவதும், அவர்களைப் பார்க்கத் தவம் கிடப்பதும் அதிமுக பலவீனப்பட்டிருப்பதை காட்டுவதாக அக்கட்சித் தொண்டர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். ஜெயலலிதா இருந்தபோது தேசிய அளவில் அதிமுக 3-வது பெரிய கட்சியாகவும், மாநிலத்தில் திமுகவை விட அதிக வாக்கு வங்கி உள்ள கட்சியாகவும் திகழ்ந்தது. ஜெயலலிதாவின் ஆளுமை, அவர் கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்திய விதம் ஆகியவற்றைப் பார்த்து, அனைத்துக் கட்சியினரும் வியந்தனர்.
மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள்கூட சென்னை வந்தால் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்குச் சென்று சந்திக்கும் நிலை இருந்தது. ஆனால், இன்று பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழகத்துக்கு எங்கு வந்தாலும் அவர்களை பாஜகவின் 2-ம் கட்டத் தலைவர்கள்போல் ஓடோடிச் சென்று பார்ப்பதும், அவர்களை சந்தித்ததைப் பெருமையாக வெளியே பேசுவதும் அதிமுகவை பலவீனப்படுத்துவதாக அக்கட்சித் தொண்டர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும்கூட அதிமுக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுகவிடம் தோற்றது. தினகரன் தனித்துப் போட்டியிட்டதால் அது அதிமுகவின் வெற்றியையும், கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தங்களுடைய வெற்றியையும் பாதித்ததாக பாஜக கருதுகிறது. பாஜக மேலிடம், அதிமுக கூட்டணியில் தினகரனை சேர்க்க கடைசி வரை முயற்சி செய்தது. தினகரனும் அதற்கு சம்மதித்து அவருக்கு தேவையான தொகுதிகளை கேட்டார். ஆனால், அதற்கு பழனிசாமி ஒப்புக் கொள்ளவில்லை. அதுபோன்ற நிலை மக்களவைத் தேர்லில் வரக்கூடாது என்று பாஜக நினைக்கிறது.
அதனால், பாஜக மேலிடம், திரைமறைவில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் உள்ளிட்ட அதிமுக அணிகளை ஒன்றாக இணைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருக்கிறார். ஆனால், பழனிசாமி தற்போது வரை பிடி கொடுக்காமல் இருக்கிறார். தற்போது உள்ள சூழலில் நீதிமன்றத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம் வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் முடிவு என்னவாகும் எனத் தெரியவில்லை. அதன் தீர்ப்பு எப்படியாக இருந்தாலும் இருவரும் இணையாதபட்சத்தில் அது அதிமுக கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாஜக கருதுகிறது.
அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக வந்த பிறகு அக்கட்சி தமிழகத்தில் ஓரளவு வளர்ந்துள்ளது. அதனால், கணிசமான தொகுதிகளை தமிழகத்தில் அதிமுக கூட்டணி கைப்பற்ற வேண்டும் என பாஜக நினைக்கிறது. எனவே, பழனிசாமியை சரிக்கட்ட பாஜக பல வழிகளில் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. அதற்கு பாஜகதான் அதிமுகவை நோக்கி இறங்கி வர வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக அதிமுக தலைவர்களான பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜக தலைவர்களை பார்த்ததும் பணிந்து செல்வதும், அவர்களைப் பார்க்க காத்துக் கிடப்பதையும் அதிமுக தொண்டர்கள் ரசிக்கவில்லை.
திண்டுக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை விமான நிலையத்துக்கு மோடி வந்தபோதும், திரும்பிச் சென்றபோதும் அவரை சந்திக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தவம் கிடந்ததையும், எங்களிடம் மட்டுமே பிரதமர் மோடி பேசினார் என்று அவர்கள் கூறிக் கொள்வதும் அதிமுக தொண்டர்களிடம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்குப் போட்டியாக கவுரவமாக அரசியலில் ஈடுபட்டு வந்த தொண்டர்கள் அதிமுக தலைவர்களின் இந்த நடவடிக்கையால் தங்கள் கவுரவம் பறிபோய் விட்டதாகக் கருதுகின்றனர். ஜெயலலிதாவைப்போல் ஆக வேண்டாம், குறைந்தபட்சம் அவரைபோல் கட்சியை வழிநடத்தவாவது முயற்சி செய்ய வேண்டாமா? என்பதே தொண்டர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.