Published : 15 Nov 2022 06:18 AM
Last Updated : 15 Nov 2022 06:18 AM

முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரையும் முகாமில் இருந்து 10 நாளில் விடுவிக்க நடவடிக்கை: திருச்சி ஆட்சியர் தகவல்

திருச்சி: திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரையும் இன்னும் 10 நாளில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தங்களை முகாமின் உள்பகுதியில் பிற வெளிநாட்டினருடன் தங்க வைக்க வேண்டும், நடைபயிற்சி செல்ல இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும், தனித்தனி கட்டில் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் நேற்று காலை அறிவித்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் அங்கு சென்று 4 பேரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது ஆட்சியர் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர்கள் காலை உணவைப் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து வெளியே வந்த ஆட்சியர் மா.பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் தாங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்து வெளியில் நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர். விரைவில் அதற்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேட்ட பிற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவர் விரும்பவில்லை: இவர்களை மீண்டும் அவர்களது நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதிக் கடிதம் பெற 10 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கிறோம். 4 பேரில் ஒருவர் (முருகன்) மட்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை. அவர் மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கு இன்னும் 10 நாட்களுக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். எனவே, அவருக்கும் சேர்த்து, 10 நாளில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதிக் கடிதத்தை பெற முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x