

தஞ்சாவூர்: முருகன் உட்பட 4 தமிழர்களை இலங்கைக்கு அனுப்பினால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, அவர்கள் தமிழ்நாட்டில் வாழ தமிழக முதல்வர் அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 32 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த முருகன்,சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் தமிழகஅரசு திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமார், முருகன் உட்பட 4 பேரின் சொந்தநாடான இலங்கையிடம் ஒப்புதல் பெற்ற பிறகு, அவர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட இந்த நால்வரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என்பது இந்திய அரசின் குற்றச்சாட்டு. 2009-க்குப்பிறகு விடுதலைப்புலிகள் அமைப்புஇல்லை. அதன் செயல்பாடுகளும் இல்லை. ஆனாலும், அந்தப் பெயரை வைத்துக் கொண்டு, தமிழர்களை இலங்கை சிங்கள அரசு இன்றும் பழிவாங்கி வருகிறது. தமிழக அரசும், இந்திய அரசும் இந்த 4 பேரையும் இலங்கைக்கு அனுப்பினால், நேரடியாக அவர்களை சிறையில் தான் அடைப்பார்கள்.
அவர்களுடைய உயிருக்கும் ஆபத்து நேரலாம். இதனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறையில் செயல்படுத்தப்படாத ஒன்றாகிவிடும். பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாக இங்கேதமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது வருபவர்களும் அகதி முகாம்களில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறார்கள். அவர்கள் வாழ வசதிஏற்படுத்தித் தருகிறது தமிழக அரசு.
எனவே, இந்த 4 பேரையும், இலங்கையிலிருந்து வந்தஅகதிகளாக ஏற்று, மற்ற ஈழத்தமிழர்கள் பெற்றுள்ள வாழ்வுரிமையை இவர்களுக்கும் தமிழ்நாட்டில் வழங்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து, 4 பேரையும் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.