Published : 15 Nov 2022 04:35 AM
Last Updated : 15 Nov 2022 04:35 AM

சிறப்பு முகாமும் சிறையில் இருப்பது போலவே உள்ளது: முருகனைச் சந்தித்த பிறகு நளினி கருத்து

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் நேற்று தனது கணவர் முருகனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நளினி.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி: விடுதலையான பிறகும் சிறப்பு முகாமில் இருப்பது சிறையில் இருப்பது போலவே உள்ளது என கணவர் முருகனைச் சந்தித்த பிறகு நளினி தெரிவித்தார்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகனை அவரது மனைவி நளினி, இவரது சகோதரர் பாக்கியநாதன், முருகனின் சகோதரி தேன்மொழி, வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நளினி கூறியது: எனது கணவர் முருகனும், நானும் லண்டன் சென்று மகளுடன் வசிக்க விரும்புகிறோம். விடுதலைக்குப் பிறகும், சிறப்பு முகாமில் இருப்பது சிறையில் இருப்பதுபோலவே உள்ளது. எனவே 4 பேரையும் விரைந்து விடுவித்து அவரவர் விரும்பும் நாட்டுக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவேன் என நம்புகிறேன். இங்கு, எனது மகளுக்கு துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும். தீ மிதிப்பதாகவும் வேண்டியுள்ளேன். வேண்டுதல் நிறைவேறியதால் திருப்பதிக்கு நடந்து செல்லவும் முடிவு செய்துள்ளேன் என்றார்.

முன்னதாக அவர், ஆய்வுக்கு வந்த ஆட்சியர் மா.பிரதீப்குமாரை சந்தித்து, விடுதலைக்குப் பின் தனது கணவரை லண்டனுக்கு அனுப்பி வைக்க உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதற்கு, இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக மனு அளித்தால், அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக நளினியிடம் ஆட்சியர் தெரிவித்தார். இதேபோல, சிறப்பு முகாமில் உள்ள ஜெயக்குமாரை அவரது மனைவி சாந்தி சந்தித்துப் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x