Published : 14 Nov 2022 12:57 PM
Last Updated : 14 Nov 2022 12:57 PM

இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதி, ராஜீவை கொலை செய்தவர்களுக்கு ஒரு நீதியா? - கே.எஸ்.அழகிரி கேள்வி

கே.எஸ்.அழகிரி | கோப்புப்படம்

சென்னை: "கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் வழக்குகூடப் பதிவு செய்யப்படாமல், இன்னும் சந்தேகத்தின் பெயரிலேயே சிறையில் உள்ளனர். ஏன் அவர்களை விடுதலை செய்யவில்லை? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு ஒரு நீதியா?" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134-வது பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மலர்தூவி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மரியாதைய செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து 6 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எனக்கு அதில் உடன்பாடு இல்லை. கொலைகாரர்களை வெளியே உலவ விடுவது தவறு. அதன்பிறகு சமூகத்தில் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருக்காது.

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான தமிழரகள் கைதிகளாக இருக்கின்றனர். ஏன் அவர்களை எல்லாம் விடுதலை செய்யவில்லை? கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் வழக்குகூடப் பதிவு செய்யப்படாமல், இன்னும் சந்தேகத்தின் பெயரிலேயே சிறையில் உள்ளனர். ஏன் அவர்களை விடுதலை செய்யவில்லை? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு ஒரு நீதியா? என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட 6 பேரும், சிறையில் இருந்தபடியே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சித்துள்ளனர். பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அனைத்து அம்சங்களும் இவர்களுக்கும் பொருந்தும் எனக் கூறி, அவர்கள் 6 பேரையும் கடந்த நவ.11-ம் தேதி விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x