மாநில மொழிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: மத்திய அரசின் புதிய முயற்சி

மாநில மொழிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: மத்திய அரசின் புதிய முயற்சி
Updated on
1 min read

சென்னை: வாகனம் மற்றும் உரிமம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள பரிவாகன், சாரதி போன்ற இணையதளங்களை மத்திய அரசு தொடங்கியது. இதையடுத்து வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமத்துக்கான விண்ணப்பம், புதுப்பித்தல் போன்ற சேவைகள் மின்னணு மயமாக்கப்பட்டன. இந்த இணையதளம் மூலம் சேவைகளைப் பெறும்போது, அந்த விண்ணப்பத்தின் நிலை,ஓடிபி, முக்கியத் தகவல் போன்றவைகுறுஞ்செய்தி வாயிலாக செல்போனுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அதன்பின் அவ்வப்போது இந்தி, ஆங்கிலத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான தகவல்களும் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் தற்போது மாநிலமொழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன் பகுதியாக வாகனஉரிமையாளர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் போன்றோரின் செல்போன் எண்ணுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் தமிழிலும் அனுப்பப்படுகின்றன. "குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் உயிர் பறிபோகலாம் - Morth" எனத் தமிழ் மொழியில் வரும் வாசகங்கள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோல் போக்குவரத்து விதிமீறலால் விளையும் ஆபத்துகள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (2021) அறிக்கையின்படி கடந்தஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளின் உயிரிழப்பு எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in