‘ஓட்டுநர் இல்லாத ரயில்கள்’ - பூந்தமல்லி வழிதடத்தில் இயக்க 26 மெட்ரோ ரயில்களை தயாரிக்கிறது அல்ஸ்டாம்

‘ஓட்டுநர் இல்லாத ரயில்கள்’ - பூந்தமல்லி வழிதடத்தில் இயக்க 26 மெட்ரோ ரயில்களை தயாரிக்கிறது அல்ஸ்டாம்
Updated on
1 min read

சென்னை: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ ரயில் 5-வது வழித்தடத்தில் இயக்குவதற்காக, 3 பெட்டிகளைக் கொண்ட 26 ஓட்டுநர் இல்லாத ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டாம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஒன்று கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி (26 கி.மீ.) வழித்தடமாகும். இந்தவழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்காக, ஓட்டுநர் இல்லாத 26 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டாம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் 16 கி.மீ.உயர்மட்ட பாதையிலும், 10 கி.மீ. சுரங்கப்பாதையிலும் அமைகிறது. 30 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. தலா 3 பெட்டிகளை கொண்ட 26 ரயில்களை தயாரிக்க ரூ.798 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, 78 பெட்டிகள் அல்லது 26 ரயில்களை அல்ஸ்டாம் தயாரித்து, சோதனை செய்துவழங்க வேண்டும். இந்த மெட்ரோ ரயில் பெட்டிகள் 100சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். இந்த ரயில் பெட்டிகள்ஓட்டுநர் இல்லாமல் இயங்கக்கூடிய வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படுகிறது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன (இயக்ககம்) இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கூறியதாவது: அல்ஸ்டாம் நிறுவனம், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சுற்றுச்சூழலுக்கு குறைந்த தாக்கத்துடன் இணைப்பை வழங்கும். இது நகரத்தில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு பயனளிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in