ஒரே நாளில் 108 இடங்களில் கனமழை பெய்தது - புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 16-ம் தேதி உருவாகிறது

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் தலைச்சங்காடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.  உடன் எம்.பி செ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் ரா.லலிதா உள்ளிட்டோர். (அடுத்தபடம்) கடலூர் மாவட்டம்  குமராட்சி அருகே சிறகிழந்தநல்லூரில் மழை நீரில்  மூழ்கியுள்ள நெற்பயிரை காட்டும் விவசாயிகள்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் தலைச்சங்காடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். உடன் எம்.பி செ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் ரா.லலிதா உள்ளிட்டோர். (அடுத்தபடம்) கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே சிறகிழந்தநல்லூரில் மழை நீரில் மூழ்கியுள்ள நெற்பயிரை காட்டும் விவசாயிகள்.
Updated on
1 min read

சென்னை: வங்கக் கடலில் வரும் 16-ம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், 6 இடங்களில் அதிகனமழையும், 16 இடங்களில் மிகக் கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

அதிகபட்சமாக சீர்காழியில் 44 செமீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழையாகும். மேலும் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 32 செமீ, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 31 செமீ, அண்ணாமலை நகரில் 28 செமீ, புவனகிரியில் 21 செமீ, காட்டுமன்னார்கோவிலில் 19 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 18 செமீ மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளைக் கடந்து அரபிக் கடல் பகுதிக்கு செல்லக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை மற்றும் 15, 16-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக 13-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 16-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

13-ம் தேதி குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in