Published : 12 Nov 2022 11:34 AM
Last Updated : 12 Nov 2022 11:34 AM

10% இடஒதுக்கீடு | “சமூக நீதியை பேராபத்து சூழ்ந்திருக்கிறது” - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர், இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதாரிக்கிறார்கள். எந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தாலும், பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் முரணானது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (நவ.12) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தமிழர் வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் பங்கேற்றன. அதிமுக மற்றும் பாஜக இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "நூற்றாண்டு காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்த சமூகநீதிக்கு இன்று பேராபத்து சூழ்ந்திருக்கிறது. சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியையைும் வேலைவாய்ப்பையும் கொடுத்து, அனைத்திலும் முன்னேற்றுவதற்கு பயன்படும் மாபெரும் தத்துவம்தான் சமூகநீதி கொள்கை.

1920-ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தை இரட்டை ஆட்சி முறைப்படி ஆட்சி செலுத்திய நீதிக்கட்சியானது வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை ஆணையைப் பிறப்பித்தது. காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அதன்பிறகுதான், பள்ளிக் கல்லூரிக்குள் பெருமளவில் நுழைந்தார்கள். அப்படி கிடைத்த கல்வியின் மூலமாக வேலைவாய்ப்பை அடைந்தார்கள். இதற்கு வேட்டுவைக்கும் விதமாக, கம்யூன் அரசாணை என்பது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் 1950-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-வது பிரிவில், சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் என்றுதான் வரையறையில் உள்ளது. அதேதான், அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது. அதாவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு தரவேண்டும் என்பதுதான், இந்திய அரசியலமைப்பு சட்ட வரையறை.

அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், பொருளாதாரத்தை அளவுகோலாக புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு. அதன்படி ஒரு சட்டத்தை 2019-ம் ஆண்டு செய்தார்கள். அந்த சட்டத்தைத்தான் தற்போது உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளனர். சமூகத்தில் முன்னேறிய சாதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதுதான் ஒன்றிய பாஜக அரசின் திட்டம்.

இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர், இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதாரிக்கிறார்கள். இதனை விளக்கமாக நான் சொல்ல தேவையில்லை. எந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தாலும், பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் முரணானது" என்று அவர் பேசினார்.

தீர்மானம் விவரம்: இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எனப்படுவது - இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதி தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளில் சாதிப் பிரிவினையைக் கற்பித்துப் பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும், நாங்கள் அதனை நிராகரிக்கிறோம்.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூகநீதியினையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையைப் போக்கும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள், சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம். சமூக நீதித் தத்துவத்தைக் காக்கத் தமிழ்நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x