Published : 12 Nov 2022 06:52 AM
Last Updated : 12 Nov 2022 06:52 AM

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் 135 ஏரிகள் முழுமையாக நிரம்பின: பாலாற்று தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர் வழிகின்றன

செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 135 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள், நேற்றைய காலை 6 மணி நிலவரப்படி 31 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும், 37 ஏரிகள் 76 சதவீதமும் 143 ஏரிகள் 50-ல் இருந்து 75 சதவீதமும், 326 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும் 373 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வாயலூர், வல்லிபுரம் மற்றும் பழையசீவரம் ஆகிய பகுதிகளில் உள்ள பாலாற்று தடுப்பணைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.

மின் கம்பங்கள் சாய்ந்தன: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோர பகுதிகளான மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்தூர், கேளம்பாக்கம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால், சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. பலத்த காற்றுடன் மிதமான மழைபெய்ததால், மதுராந்தகத்தை அடுத்த அரியலூர் கிராமத்தில் சேதமடைந்த நிலையிலிருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. இதேபோல், செய்யூரிலும் ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அப்பகுதியில் மின்சார வாரிய பணியாளர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். செங்கல்பட்டு நகரப்பகுதியில் பெய்த மழையால் ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொசஸ்தலை, கூவம், ஆரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் நீர்வளத் துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 1,155 ஏரிகளில், நேற்று காலை நிலவரப்படி 62 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில், நீர்வளத் துறையின் 574 ஏரிகளில் 51 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 581 ஏரிகளில் 11 ஏரிகளும் முழுமையாக நிரம்பி வழிகின்றன. மேலும், மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரிகளில், 166 ஏரிகள் முழு கொள்ளளவில் 75 சதவீதமும், 262 ஏரிகளில் 50 சதவீதமும், 414 ஏரிகளில் 25 சதவீதமும் நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 42 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும் 33 ஏரிகளில் 76 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ளது. 143 ஏரிகளில் 51 சதவீதத்தில் இருந்து 75 சதவீதம் வரையும் மற்ற ஏரிகளில் அதற்கு குறைவாகவும் தண்ணீர் உள்ளது.

தயார் நிலையில் படகுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரதராஜபுரம் மழைக் காலங்களில் கடுமையாக பாதிக்கப்படும் பகுதி என்பதால் அந்தப் பகுதியில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்குவதற்கான இடங்களும் தயார் நிலையில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x