Published : 11 Nov 2022 11:29 AM
Last Updated : 11 Nov 2022 11:29 AM

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை | சாலைகளில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் சரிசெய்ய உத்தரவு

சென்னையில் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள குடிநீர் வாரிய பணியாளர்கள்

சென்னை: சென்னையில் நேற்று (நவ.10) இரவு முதல் தொடரும் கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது நாளை (12 ஆம் தேதி) தமிழகம்-புதுச்சேரி கடற்கரை இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக, இன்று 11 ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இன்று (11-ம் தேதி) திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட கடலோர தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

விடிய விடிய கனமழை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு இன்று (நவ.11) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டை, அடையாறு, மயிலாப்பூர், திருவான்மியூர், வியாசர்பாடி, புரசைவாக்கம் உட்பட பல்வேறு இடங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீரை அகற்ற உத்தரவு: சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரிய பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மழைநீர் தேங்கியுள்ளதாக புகார்: சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக 96 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், 5 இடங்களில் கழிவுநீர் வெளியேறியுள்ளதாகவும், 9 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளதாகவும், 108 இடங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை என புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 231 இடங்களில் புகார்கள் பெறப்பட்டு நிலையில், 31 இடங்களில் குறைகள் சரிசெய்யப்பட்டு, மற்ற இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

மழைக் காலங்களில் நீர் தேங்கும் இடங்களான தி.நகர் ஜிஎன் செட்டி சாலை, பசுல்லா சாலை, வள்ளுவர் கோட்டம் மற்றும் வடசென்னை பகுதிகளான வியாசர்பாடி ஜீவா சுரங்கப்பாதை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்டீவன்சன் சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x