விதிகளைப் பின்பற்றி பணி நியமனம் | உத்தரவாதத்துடன் மனு தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: புதுச்சேரியில் அரசு பணி நியமனங்கள் விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. தற்காலிகமாக பணியாளர்களாக நியமித்து பின் அவர்களே பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். இந்த சட்டவிரோதமான நியமனங்களால் படித்து விட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுப் பணி துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணி நியமங்களின் நிலை, எத்தனை பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களுடன் புதுச்சேரி மாநில பொதுப் பணித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி பொதுப் பணித்துறை செயலாளர் குமார் நேரில் ஆஜராகியிருந்தார்.

புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "2016-ம் ஆண்டு முதல் இதுவரையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அரசுப் பணி நியமனங்கள் முழுக்க முழுக்க விதிகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, "விதிகளை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in