Published : 09 Nov 2022 06:44 AM
Last Updated : 09 Nov 2022 06:44 AM

வாக்காளர் பட்டியல் திருத்தம் இன்று பணிகள் தொடக்கம்: வரைவுப்பட்டியலும் வெளியாகிறது

சென்னை: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன், ஆதாரை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 55 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆதார் விவரங்களை அளித்துள்ளனர். இப்பணிகள் வரும் 2023 மார்ச் வரை நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. சென்னையில் மாநகராட்சி ஆணையர் உட்பட மற்ற மாவட்டங்களில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்கள் இந்த பட்டியலை வெளியிடுகின்றனர்.

இப்பணிகள் இம்மாத இறுதிவரை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மனு அளிக்கலாம். இதுதவிர பெயர் நீக்கம், தொகுதிக்குள் முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை உரிய படிவங்களை அளித்து மேற்கொள்ளலாம். வாக்காளர் பதிவு அலுவலரிடம் நேரடியாகவோ, தாலுகா அலுவலகங்களில் அதிகாரிகளிடமோ, `nvsp’ இணையதளம், செயலி வாயிலாகவோ திருத்தம் மேற்கொள்ளலாம். இதுதவிர, தமிழகத்தில் 4 சனி, ஞாயிறு நாட்களில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடத்தப்படுகிறது. அதன்படி, இம்மாதம் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதே காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் விவரங்களை இணைப்பதற்கான மனுக்களையும் அளிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x