

மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் கூடல்நகர் அருகேயுள்ள அசோக் நகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடை குழாய்கள் இணைக்கும் பணி நடந்தது.
இதில், ஈரோடு மாவட்டம் குப்பாண்டபாளையம் அருகே ஆதனிக்கரட்டூரைச் சேர்ந்த சக்திவேல்(35) உள்ளிட்ட பலர் ஈடுபட்டிருந்தனர். 12 அடி ஆழக் குழியில் இறங்கி சக்திவேல் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது குழிக்கு அருகிலேயே குவிக்கப்பட்டிருந்த மண் மழை நீரால் நனைந்திருந்த நிலையில், மொத்தமாக சரிந்து அதில் புதைந்த சக்திவேல் அந்த இடத்திலேயே இறந்தார்.
இவரது சகோதரர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீஸார் ஏ.கே.கட்டுமான நிறுவன உரிமையாளர் அசோகன், மேலாளர் சுபாஷ்சந்திரபோஸ், மேற்பார்வையாளர் ரவிக்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, உயிரிழந்த சக்திவேலின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். நிவாரணமாக ஒப்பந்த நிறுவனம் வழங்கிய ரூ.10 லட்சத்தை சக்திவேலின் குடும்பத்துக்கு மேயர் இந்திராணி நேற்று வழங்கினார்.