Published : 08 Nov 2022 03:14 PM
Last Updated : 08 Nov 2022 03:14 PM

10% இடஒதுக்கீடு தீர்ப்பு | நவ.12-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இம்மாதம் 12-ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத் திருத்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 7-11-2022 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக் கொள்கைக்கும் மாறானது என்பதால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக, வருகின்ற 12-11-2022 (சனிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இப்பொருள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் விவரம்: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். அதன் விவரம்: 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பில் கூறியது என்ன?

அதேவேளையில், பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார். அதன் விவரம்: 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் நீதிபதி ரவீந்திர பட்டின் மாறுபட்ட தீர்ப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x