Published : 08 Nov 2022 06:30 AM
Last Updated : 08 Nov 2022 06:30 AM

10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான பிரச்சாரத்தை திமுக நிறுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்காக மத்திய அரசு கொண்டுவந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக நடத்தும் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ‘மோடியின் தமிழகம்’ புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. புத்தகத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

‘மோடியின் தமிழகம்’ புத்தகத்தில் 27 அத்தியாயம் உள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் நமதுஆர்வத்தை தூண்டுகிறது. மத்திய அரசு கொண்டுவந்த பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத உள்இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதை பாஜக வரவேற்கிறது. இந்தஇட ஒதுக்கீட்டை எதிர்த்து தமிழகத்தில் திமுக விஷமத்தனமான பிரச்சாரம் செய்கிறது. பொருளாதார அடிப்படையில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த இடஒதுக்கீடு பெறுவதற்கு சில வழிமுறைகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள பல சமுதாயங்கள் பயன் பெறும்.

இந்த தீர்ப்பு எந்த சமுதாயத்துக்கும் எதிரானது கிடையாது. இதனால் ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீடுகளுக்கு எந்த பிரச்சினைகளும் கிடையாது. , இத்திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதிமுக தலைமையில் கூட்டணி: இன்று வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். 2019மற்றும் 2021 தேர்தலில் அதிமுககூட்டணியில்தான் இருந்தோம். எனவே, அதிமுக தலைமையில் கூட்டணி என்பதில் எந்த குழப்பமும் கிடையாது. பழனிசாமி கூறியதில்எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால், கூட்டணி எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து தேசியதலைவர்தான் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

பால் விலை உயர்வை கண்டித்து நவ.15-ல் ஆர்ப்பாட்டம்

பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 1,200 இடங்களில் வரும் 15-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக கட்சித் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசின் ஆவின் நிறுவனம் அதன் நிர்வாக சீர்கேட்டால், நஷ்டத்தில் நடத்தப்படுகிறது. இந்த நஷ்டத்தை மக்கள் தலையில் சுமத்துவதை ஏற்கமுடியாது. ஏற்கெனவே, வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, தண்ணீர் வரி உயர்வு, பதிவுக் கட்டணம் உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு என்று அனைத்து வரிகளையும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x