Published : 07 Nov 2022 04:44 PM
Last Updated : 07 Nov 2022 04:44 PM

வடகிழக்கு பருவமழை | தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 45 வீடுகள் சேதம், 23 கால்நடை இறப்புகள் பதிவு

கோப்புப் படம்

சென்னை: வடகிழக்கு பருவமழையால் நேற்று (நவ.6) தமிழகத்தில் 23 கால்நடை இறந்துள்ளதாகவும், 45 குடிசைகள் சேதம் அடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று (நவ.6) தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் 6.39 மி.மீ. மழை பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 24.98 மி.மீ. பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 6-ம் தேதி மனித உயிரிழப்பு பதிவாகவில்லை. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழையின் காரணமாக 23 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 45 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று (நவ.6) வரை சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 71 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 29ம் தேதி முதல் 5ம் தேதி வரை 2,83,961 உணவு பொட்டலங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 648 இடங்களில் தேங்கி இருந்த மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 833 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.

முதல்வர் கடந்த 2ம் தேதி அன்று மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை, நிவாரண நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். முதல்வரின் அறிவுரைகளின் படி வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (நவ.7) மதியம் 12 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் 20.61 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கத்திற்கு 19 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 713 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. புழல் ஏரியில்18.73 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 165 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 292 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x