கொசுக்கள், பூச்சிகளால் ஏற்படும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

கொசுக்கள், பூச்சிகளால் ஏற்படும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 4,806 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது. அதேபோல், 140 பேர் சிக்குன் குனியா,279 பேர் மலேரியா, 1,470 பேர்லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல், 2,455 பேர் ஸ்கரப்டைபஸ் எனப்படும் பாக்டீரியாதொற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

எலிக்காய்ச்சல் மற்றும் ஸ்கரப்டைபஸ் நோய் பாதிப்பு விகிதம், கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு 25-க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை.

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன், டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால், உடனடியாக தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களை, கொசு ஒழிப்பு பணிகளிலும்,பாக்டீரியா தொற்று தடுப்புப் பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும்அரசிடம் உள்ளன.

மழைக்கு பின்னர், சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயின்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் தண்ணீரில்கொசுக்கள் உற்பதியாகக்கூடும். அதனால், அந்தப் பொருட்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in