

சென்னை: பழவூர் சிலை கடத்தல் விசாரணையில் முறைகேடு நடந்ததாக பொன்.மாணிக்கவேல் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புகார் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005-ம்ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இதில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டியில் கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை மீட்ட போலீஸார், அவற்றை சர்வதேச கும்பலுடன் சேர்ந்து வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விற்க உதவியதாகப் புகார் எழுந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் திருவள்ளூரில் துணை கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக இருந்தசுப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், திருநெல்வேலி பழவூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனை தப்பிக்க வைக்கவே, அவருடன் சேர்ந்து தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், அவர் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாஷா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொன்.மாணிக்கவேல், காதர் பாஷா ஆகிய இருவரும்ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர் என்றும், சிலை கடத்தல் தொடர்பான உண்மை வெளிவர சிபிஐ விசாரணைதான் சரியாக இருக்கும். எனவே, நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பொன்.மாணிக்கவேல் மீதான புகாரின்மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கடந்த ஜூலை மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், டெல்லி சிபிஐ இந்த வழக்கை தற்போது விசாரணைக்கு எடுத்துள்ளது. குறிப்பாக காதர் பாஷா, சுப்புராஜ் ஆகியோர் மீது சிலை கடத்தலுக்கு உதவியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட, அந்த முதல் தகவல் அறிக்கையைப் பயன்படுத்தி தற்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விரைவில் பொன்.மாணிக்கவேலுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக கோரவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.