மழைக் காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? - பாதுகாப்பு வழிமுறைகள்

மழைக் காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? - பாதுகாப்பு வழிமுறைகள்
Updated on
1 min read

புதுச்சேரி: மழை காலங்களில் மின் விபத்துக்களை தவிர்க்கும் பாதுகாப்பு வழிமுறைகளை மின்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி மின்துறை ரூரல் (வடக்கு) பகுதி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு: மழைக்காலங்களில் மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு போன்றவற்றைக் கட்டக்கூடாது. மின்கம்பங்களில் ஆடு மாடு போன்ற வீட்டு விலங்குகளைக் கட்டக்கூடாது.

மின்சார மேல்நிலைக் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுக வேண்டும். மழைக் காலத்தில் இடி மின்னல் விழும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் நிற்கக் கூடாது. இடி மின்னல் இருக்கும்போது டிவி, கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இத்தகைய மின்சாதனங்களின் இணைப்பு வயரை பிளக்கிலிருந்து அகற்றி வைக்க வேண்டும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக 18004251912 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மின்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மின் மாற்றிகள், மின்பெட்டிகள், மின் இழுவைக் கம்பிகள் ஆகியவற்றைத் தொடக் கூடாது. கனரக வாகனங்களை மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரைக் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.தீயணைப்பு துறையின் உதவியை நாட வேண்டும்.

வீட்டில் சுவர்களில் மின்சாதனங்களில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உலர்ந்த ரப்பர் காலணி அணிந்து மெயின் ஸ்விட்சை அணைத்து விட வேண்டும். உடனே மின்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

உடைந்த ஸ்விட்ச், பிளக், ப்யூஸ் போன்றவற்றை உடனடியாக மாற்ற வேண்டும். குளியல் அறையில் ஈரமாக வாய்ப்புள்ள இடங்களில் ஸ்விட்சுகளை பொருத்தக் கூடாது. பிளக் ஸ்விட்சை அணைத்த பிறகே மின்விசிறி, அயர்ன் பாக்ஸ், செல்போன் சார்ஜர் போன்றவற்றை பிளக்கில் இணைக்க வேண்டும். டிவி ஆண்டனாக்களில் மின்சார வயரைக் கட்டக்கூடாது.

மின்சார சார்ஜரில் இணைப்பில் இருக்கும்போது செல்போனைப் பயன்படுத்தக் கூடாது. நில இணைப்பை (எர்த்திங்) சரிபார்த்துக் கொள்ள வேண்டும். கிரைண்டர் போன்ற உபகரனங்களுக்குத் தனியாக நில இணைப்புக் (எர்த்திங்) கொடுக்க வேண்டும், ஒரு மின் சாதனத்துக்கான வயரில் வேறு எந்த மின் சாதனத்தையும் இணைக்க கூடாது.

பழுதான ஸ்விட்ச், பியூஸ் போன்றவற்றை மாற்றும் போது அதே அளவு திறன் கொண்ட சாதனங்களையே பொருத்த வேண்டும். ஸ்விட்ச் போர்டு, மின்மோட்டார், தண்ணீர் பம்பு மோட்டார் போன்றவற்றின் மீது தண்ணீர், மழை நீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. இடி மின்னல் இருக்கும்போது டிவி, கம்ப்யூட்டர், செல்போன்போன்றவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in