Published : 06 Nov 2022 06:48 AM
Last Updated : 06 Nov 2022 06:48 AM

கோவையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள 53 இளைஞர்களை கண்டறிந்து போலீஸ் கண்காணிப்பு

கோவை: கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள 53 இளைஞர்களை கண்டறிந்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் அதே பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபின்(25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர். தற்போது இந்தவழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபின் அடிப்படைவாத கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வந்ததும், ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். என்ஐஏ குழுவினர் 2019-ல் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், அவரை உளவுத்துறையினர் மூலம் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், முபினின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க உளவுத்துறையினர் தவறினர். இதை பயன்படுத்திக் கொண்ட முபின் கோவையில் 3 இடங்களில் வீடுகளை மாற்றியுள்ளார் என்பதும், இவர் வீடுகளை மாற்றியதையும், நேரடி கண்காணிப்பில் இருந்து விலகியதையும் அப்போது உளவுத்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

பட்டியல் சேகரிப்பு: இந்நிலையில், மத்திய, மாநிலஉளவுத்துறையினரின் தகவல்களின் அடிப்படையில், கோவையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு எண்ணத்தில் 50 இளைஞர்கள் இருப்பதை மாநகர காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இவர்களது பட்டியலை சேகரித்து நுண்ணறிவுப் பிரிவினர், சிறப்பு நுண்ணறிவுப் பிரிவினர் உள்ளிட்ட உளவுத்துறையினர் மூலம் அவர்களின் செயல்பாடுகளை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல், புறநகரப் பகுதியில் மாவட்ட காவல்துறையினர் ஐஎஸ் ஆதரவு எண்ணத்தில் உள்ள 3 பேரின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, ‘‘கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஐஎஸ் ஆதரவு நபர்களின் செயல்பாடுகள் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து ஆதார் அட்டைஉள்ளிட்ட அரசு ஆவணங்களை சேகரித்தும், செல்போன் அழைப்புகளை தொழில்நுட்பங்களின் உதவியுடன் கண்காணித்தும் வரப்படுகிது.

முன்பு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை சந்திப்போமே தவிர அடிக்கடி சந்திக்க மாட்டோம். ஆனால், ‘தற்போது சர்ப்ரைஸ் விசிட்’ என திடீரென அவர்களது வீடுகளுக்கு அடிக்கடி சென்று, அந்நபர்களின் நடவடிக்கையை கண்காணிக்கிறோம். சமீபத்தில் குனியமுத்தூரைச் சேர்ந்த ஐஎஸ்ஆதரவு நபரின் வீட்டில் சோதனைசெய்தபோது, பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அவற்றில், 100-க்கும் மேற்பட்ட ஐஎஸ் இயக்க சித்தாந்தம் சார்ந்த வீடியோக்கள் இருந்தன. மக்களை ஐஎஸ் இயக்கத்தினர் கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொல்லும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இலங்கை குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான ஜக்ரான்ஹாசிம் தொடர்பான வீடியோக்களும் இருந்தன’’ என்றனர்.

நல்வழிப்படுத்த முயற்சி: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஐஎஸ் ஆதரவுஎண்ணத்தில் உள்ள 50 பேரை மீட்டு நல்வழிப்படுத்தும் முயற்சியை தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஐஎஸ் ஆதரவு எண்ணத்தில் உள்ள இளைஞர்களுக்கு உலமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் நல்வழிப் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்கான திட்டத்தில் அந்த இளைஞர்களை பங்குபெற வைத்து, நல்வழிக் கருத்துகளை கூறி, ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. உலமாக்கள் மூலம் நல்ல கருத்துகளை போதித்து, அவர்கள் நல்ல குடிமகனாக மாற்றப்படுவர். விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x