Published : 21 Nov 2016 03:16 PM
Last Updated : 21 Nov 2016 03:16 PM

கும்பகோணம் பகுதியில் மைக்ரோ ஏடிஎம் மூலம் மக்களுக்கு பணம் விநியோகம்: விடுமுறை நாளிலும் பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு

விடுமுறை தினமான நேற்று கும்பகோணம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மைக்ரோ ஏடிஎம் எனப்படும் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் பணம் விநியோகம் செய்யப்பட்டது.

வங்கிகளில் செல்லாத 500 , 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும், புதிய ரூபாய் நோட்டுகளை பெறவும் வங்கி கிளைகள், ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் கடந்த 10 நாட்களாக நீண்ட வரிசையில் நின்று மாற்றி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாடிக்கை யாளர்களின் வசதிக்காக பாரத ஸ்டேட் வங்கி, மைக்ரோ ஏடிஎம் எனப்படும் கருவிகளை கொண்டு, வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் எந்த ஏடிஎம் கார்டையும் பயன்படுத்தி பணம் பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல அளவிலான இதன் தொடக்க நிகழ்ச்சி சுவாமிமலையில் நேற்று நடைபெற்றது. மண்டல மேலாளர் ஏ.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். காசு மேலாளர் ராமசாமி, கிளை மேலாளர் எஸ்.ஆர்.முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். சுவாமிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, சன்னதியில் ஏற்படுத்தப்பட்ட இந்த மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல, கும்பகோணம் பெரிய தெரு, பஜார் கிளை, மோதிலால் தெரு, வாளாபுரம், திருச்சேறை ஆகிய இடங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து சுவாமிமலை கிளை மேலாளர் முகுந்தன் கூறியது: வாடிக்கையாளர்களின் வசதிக்காக விடுமுறை தினத்தில் பணம் வழங்க பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்தது. அதன்படி மைக்ரோ ஏடிஎம் மூலம் எந்த ஒரு வங்கியின் ஏடிஎம் கார்டையும் பயன்படுத்தலாம். இந்த சேவை தொடர்ந்து வழங்கப்படும்போது, வங்கியின் பொதுமக்களின் கூட்டம் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x