Published : 04 Nov 2022 06:50 PM
Last Updated : 04 Nov 2022 06:50 PM

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை  நிராகரித்தது தவறு: சசிகலா தரப்பில் வாதம் 

சசிகலா | கோப்புப்படம்

சென்னை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்த வழக்கை, உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அக்கட்சியின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுச் செயலாளர் இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும் என்றும், எனவே கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டுமென்று சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும் கூறி, சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "முழுமையாக விசாரணை நடத்தாமல், தனது தரப்பு வாதங்களை முழுமையாகக் கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு" என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு இன்று(நவ. 4) இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி, "உச்சநீதிமன்ற உத்தரவு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை நிராகரித்தது தவறு. தேர்தல் ஆணையம், சின்னம் தொடர்பாகவே உத்தரவிட்டது. கட்சியின் உரிமை தொடர்பாக உரிமையியல் நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது" என்று வாதிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x