Published : 04 Nov 2022 12:08 PM
Last Updated : 04 Nov 2022 12:08 PM

'ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை உயர்வு சாமான்ய மக்களை பாதிக்காது' - அமைச்சர் நாசர் விளக்கம்

அமைச்சர் நாசர் | கோப்புப்படம்

சென்னை: "தமிழகத்தில் ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை ஏற்கெனவே 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர். இந்த பாலை சந்தா அட்டைகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு அதே விலைதான், அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர்களுக்கு இந்த பால் ரூ.48-க்கும், வணிக பயன்பாட்டிற்காக வாங்குபவர்களுக்கு மட்டும் ரூ.60-க்கும் விற்பனை செய்கிறோம்" என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " ஆவினில் பால் கொள்முதல் விலையை, பசும்பால் லிட்டருக்கு ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.41-லிருந்து ரூ.44-ஆகவும் உயர்த்தப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தமிழக முதல்வர் உயர்த்தியிருக்கிறார்.

இந்த பால் விலையேற்றம் சாதரண மக்களுக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. முழுக்க முழுக்க வாணிப நோக்கத்தோடு விற்பனை செய்யப்படுகிற ஆரஞ்சு நிற பாக்கெட் பாலுக்கான விலை மட்டும்தான் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்குமுன் ரூ.48-க்கு விற்பனை செய்து வந்தோம், இதே நிறைகொழுப்பு பாலை மற்ற மாநிலங்களிலும், மற்ற தனியார் நிறுவனங்களும் ஏறக்குறைய ரூ.70-வரை விற்பனை செய்கின்றனர். பாஜக ஆளுகின்ற குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் விலையைவிட ரூ.10 குறைவாக, அதாவது ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை ஏற்கெனவே 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர். இந்த பாலை சந்தா அட்டைகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு அதே விலைதான், அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர்களுக்கு இந்த பால் ரூ.48-க்கும், வணிக பயன்பாட்டிற்காக வாங்குபவர்களுக்கு மட்டும் ரூ.60-க்கும் விற்பனை செய்கிறோம்.

மத்திய அரசு வரலாற்றில் இல்லாத நிகழ்வாக, பாலுக்கும் ஜிஎஸ்டி விதித்துள்ளது. இதனால் விற்பனை விலை உயர்ந்துள்ளது. இருந்தாலும், மக்களை பாதிக்காத வகையில்தான் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x