Published : 04 Nov 2022 04:12 AM
Last Updated : 04 Nov 2022 04:12 AM

கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 2.16 லட்சம் டன் நெல் கூடுதலாக கொள்முதல் - உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2.16 லட்சம் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

உணவுத் துறை சார்பில், நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கான கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சக்கரபாணி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆய்வு செய்ய இலக்கு: தமிழகத்தில் நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்ய, தனி வருவாய் அலுவலர்களுக்கு மாதாந்திர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆய்வுகள், கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரம் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.

கடைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வுக்குச் செல்லும்போது, விற்பனை முனைய இயந்திரத்தை நிறுத்தி ஆய்வு செய்தால், பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும். அதை தவிர்க்க, ஒவ்வொரு அலுவலரும் அவர் வைத்துள்ள மொபைல் போன் செயலி மூலம் ஆய்வு செய்ய ஏதுவாக, தற்போது செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செயலி மூலம் மேற்கொள்ளும் ஆய்வுகள் அனைத்தும் இணைய வழியில் சேகரிக்கப்பட்டு, தரவு தொகுப்பில் விவரங்கள் அனைத்தும் இடம் பெறும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் அலுவலர் மாதந்தோறும் மேற்கொண்ட ஆய்வு விவரங்கள், ஆய்வின்போது காணப்பட்ட குறைபாடுகளை உடனே அறிய முடியும். பொது விநியோகத் திட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதுடன், ஆய்வு அலுவலர்களையும் கண்காணிக்க இயலும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் 10 கடைகள், கூடுதல் பதிவாளர் 200 கடைகள் என, அலுவலர்கள் ஒவ்வொருவரும் எத்தனை கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

நெல் கொள்முதல்: கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவ.2-ம் தேதி வரை 8,06,442 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 1,12,534 விவசாயிகளுக்கு ரூ.1,500.91 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 4,096 விவசாயிகளுக்கு ரூ.42.99 கோடி நிலுவை உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 2.16 லட்சம் டன், அதாவது 35 சதவீதம் நெல் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 75 சதவீதம் கூடுதலாக நெல் கொள்முதலாகியுள்ளது.

நியாயவிலைக் கடைகளில் 98.3சதவீதம் பயோமெட்ரிக் பயன்பாட்டில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்கப்படுவதால், தமிழகத்தில் சோதனை அடிப்படையில் திருவல்லிக்கேணி தொகுதியிலும், அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொருட்கள் பெற ஏற்பாடு செய்யப்படும்.

கொள்முதல் செய்த நெல்லை சேமிக்க ரூ.238 கோடியில் 2.86லட்சம் டன் கொள்ளளவு குடோன்கள் 20 இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன. டிசம்பர் 10-க்குள் இவை பயன்பாட்டுக்கு வரும். எனவே, திறந்தவெளியில் இனி நெல்லை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தினசரி 6,500 டன் நெல்லை அரைத்து அரிசியாக்கி, கிடங்குகளுக்கு அனுப்பும் வகையில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் 25 ஆயிரம் கடைகள் சொந்தக் கட்டிடங்களில் உள்ளன. இவற்றில் 2,405 கடைகள் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அனைத்துக் கடைகளும் புதுப்பிக்கப்படும். நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் ராகி வழங்கும் திட்டம் ஜனவரி முதல் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். கூட்டுறவு, உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ராஜாராமன் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x