Published : 04 Nov 2022 03:55 AM
Last Updated : 04 Nov 2022 03:55 AM

14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் - போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை

சென்னை: மது போதையில் வாகனம் ஓட்டி போலீஸாரிடம் சிக்குவோர், அதற்கான அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

வாகன விபத்து, விபத்தால் உயிரிழப்பு, வாகன விபத்துகளால் உடல் உறுப்பு ஊனம் உள்ளிட்டவைகளுக்கு போக்குவரத்து விதிமீறல்களே முக்கியக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை மத்திய அரசு உயர்த்தி பரிந்துரைத்தது. இதை ஏற்று தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது.

அதன்படி, உயர்த்தப்பட்ட அபராதக் கட்டணம் சில தினங்களுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றாலோ, வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டாலோ ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி, மது போதையில் வாகனம் ஓட்டுவது தெரிந்தே, அவருடன் பயணம் செய்வோருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மது போதையில் வாகனம் ஓட்டி, போலீஸில் சிக்குவோர், அதற்கான அபராத ரசீதை மட்டும் பெற்றுக்கொண்டு, பணம் செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஏலம் விடப்படும்: இதையடுத்து, மது போதையில் வாகனம் ஓட்டி சிக்குவோர், 14 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. அவ்வாறு அபராதத்தை செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஏலம் விடப்படும் என்றும் போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து காவல் அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மது போதையில் வாகனம் ஓட்டியவர்களில் யார் மீதெல்லாம் வழக்கு உள்ளதோ, யாரெல்லாம் அபராதத் தொகையை செலுத்தவில்லையோ, அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் வாரன்ட் பிறப்பிக்கப்படும். இவ்வாறு வாரன்ட் பெற்றவர்கள், 14 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்திவிட வேண்டும். அப்படி செலுத்தாவிட்டால், அவர்கள் பயன்படுத்திய வாகனம்பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படி ஏலம் விடப்படும்.

எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x