Published : 20 Nov 2016 04:53 PM
Last Updated : 20 Nov 2016 04:53 PM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 23-ல் நாடாளுமன்றம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23-ம் தேதி நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தண்ணீர் தர மாட்டோம் என கர்நாடகம் பிடிவாதமாக உள்ளது.

அதுபோல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடியும் நடைபெறவில்லை. பெரும்பாலான பகுதிகளில் சம்பா சாகுபடியும் நடைபெறவில்லை.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீர் திறக்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 23-ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் அதில் பங்கேற்க உள்ளனர்'' என சண்முகம் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x